மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 23 Jan 2023 6:45 PM GMT (Updated: 23 Jan 2023 6:45 PM GMT)

பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வருகிற 27-ந் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா 3 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் கோவிலில் கடந்த 2005-ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழா நடத்தப்பட்டது. 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து விமான பாலாலயம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது.

மேலும் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. பழமை வாய்ந்த விமான கோபுரத்துக்கும், சிற்பங்களுக்கும் வர்ணம் பூசி புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த மாதம் 12-ந்தேதி யாக சாலை அமைக்கும் பணிக்கு கால்கோள் போடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேக விழா தொடங்கியது. இதையொட்டி காலை 9.05 மணிக்கு விநாயகர் வழிபாடு, புண்யாகம், அனுக்ஞை, தன பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

அம்மன் திருவீதி உலா

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.45 மணிக்கு விநாயகர் பூஜை, 10.30 மணிக்கு திரவியாகுதி, 11 மணிக்கு மூலவருக்கு பிரசன்னாபிஷேகம், நாளை(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜை நடக்கிறது. நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளயம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து அன்னதானம், மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு நடைபெறுகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


Next Story