பொள்ளாச்சியில் நாளை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


பொள்ளாச்சியில் நாளை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 25 Jan 2023 6:47 PM GMT)

பொள்ளாச்சியில் நாளை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு விநாயகர் வழிபாடு, இரவு 7 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மகா கும்பாபிஷேகமும், காலை 9.55 மணிக்கு விநாயகர், முருகன், அங்காளயம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மகா கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.தொடர்ந்து அன்னதானம், மகா அபிஷேகம், அலங்கார வழிபாடு நடக்கிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. இந்த கும்பாபிஷேக விழாவிற்கு திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இதன் காரணமாக பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வால்பாறை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் இருந்து பொள்ளாச்சிக்கு வரும் வாகனங்கள், ஓம்பிரகாஷ் தியேட்டர் சந்திப்பில் இருந்து வலதுபுறமாக திரும்பி ஊத்துக்காடு ரோடு, கந்தசாமி பூங்கா வழியாக தேர்நிலை திடல் வழியாக செல்ல வேண்டும். தெப்பக்குளம் வீதியில் போக்குவரத்துக்கு தடை. மயிலம் சந்தை, தெப்பக்குளம் வீதியில் உள்ள நகராட்சி பள்ளி மைதானங்களில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். மேலும் சத்திரம் வீதியில் நிகழ்ச்சிக்கு வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.


Next Story