பரமத்திவேலூர் சந்தையில்வாழைத்தார் விலை சரிவுவிவசாயிகள் ஏமாற்றம்


பரமத்திவேலூர் சந்தையில்வாழைத்தார் விலை சரிவுவிவசாயிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 3 Feb 2023 6:46 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சந்தையில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வாழை பயிர்

பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்திவேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

பூவன் வாழைத்தார்

அதன்படி கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.500-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும், மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கு ஏலம் போனது.

விவசாயிகள் ஏமாற்றம்

தைப்பூசத்தை முன்னிட்டு வாழைத்தார் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில் விலை சரிவடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


Next Story