வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
உதவித் தொகை
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் 2022-23-ம் ஆண்டுக்கான தகுதியான தமிழறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த திட்டத்தில் பயன்பெற 1.1.2022 அன்று 58 வயது நிறைவடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். தாலுகா அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்றினை தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டும். இதற்கான விண்ணப்பப் படிவத்தை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 ஆகியவை அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.
28-ந் தேதி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதிக்குள் அளிக்க வேண்டும். நேரடியாக தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.