ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல்


ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல்
x

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்திய மில் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி, மே.29-

பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்திய மில் உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரேஷன் அரிசி

பொள்ளாச்சி பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அரிசியை மாவாக்கி நூதன முறையில் கடத்துவதாக இன்ஸ்பெக்டர் கோபிநாத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் நேதாஜி ரோட்டில் உள்ள மாவு மில்லிற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

வலைவீச்சு

விசாரணையில் மாவு மில், அன்பழகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதற்கிடையில் போலீசார் வருவதை அறிந்ததும் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் மில்லில் இருந்து 45 கிலோ கொண்ட 40 மூட்டைகளில் இருந்த 1800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை கேரளாவில் அதிக விலைக்கு விற்கின்றனர். அரிசியாக கொண்டு சென்றால் பிடித்து விடுவார்கள் என்பதால் நூதன முறையில் மாவாக்கி கேரளாவுக்கு கடத்தி வந்து உள்ளனர். ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

1 More update

Next Story