குமரியில் பரவலாக மழை:அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. பதிவு


குமரியில் பரவலாக மழை:அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 30 April 2023 7:15 PM GMT (Updated: 30 April 2023 7:15 PM GMT)

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

மழை

குமரி மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதே போல நேற்று முன்தினம் பல இடங்களில் மழை பெய்தது. நாகா்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடங்களுக்கு பலத்த மழையாக நீடித்தது.

இதே போல மலையோர பகுதிகள் மற்றும் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மயிலாடி, முள்ளங்கினாவிளை, குழித்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மயிலாடியில் 48.2 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 48.2 மில்லி மீட்டர் பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு மி.மீ. வருமாறு:-

களியல்-5.4, கொட்டாரம்-10.8, நாகர்கோவில்-1.4, தக்கலை-1.1, இரணியல்-2, ஆரல்வாய்மொழி-1.2, முள்ளங்கினாவிளை-26.8, முக்கடல்-7.3 என்ற அளவில் பதிவாகி உள்ளது.

அணை நிலவரம்

மழை காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 121 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 54 கனஅடி தண்ணீர் வருகிறது. பெருஞ்சாணி அணையில் இருந்து முக்கடல் அணைக்கு வினாடிக்கு 51 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு இருக்கிறது.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 36.53 அடியாகவும், பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாகவும், சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும், சிற்றார் 2 அணையின் நீர்மட்டம் 8.30 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் மைனஸ் 19 அடியாவும் உள்ளது.


Next Story