தைத்திருநாள் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும் - ராமதாஸ் பொங்கல் வாழ்த்து


தைத்திருநாள் தமிழர் வாழ்வில் மகிழ்ச்சியை உருவாக்கட்டும் - ராமதாஸ் பொங்கல் வாழ்த்து
x

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்து இருப்பதாவது:-

இயற்கையை வழிபடும் தமிழர்களின் முதன்மைத் திருநாளான தைப்பொங்கல் விழாவையும் தமிழ் புத்தாண்டையும் கொண்டாடும் தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'தமிழர் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்ற நாமக்கல் கவிஞரின் வார்த்தைகளுக்கேற்ப தமிழர்களின் பெருமைமிகு தனிச்சிறப்புகளில் ஒன்று தான் தைப்பொங்கல் திருநாள் ஆகும். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. அதுமட்டுமின்றி, மதங்களைக் கடந்த திருநாள் என்ற பெருமையும் பொங்கலுக்கு உண்டு. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர்கள் வீடுகளில் தோரணம் கட்டி, புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப்பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வார்கள்.

உலகில் இயற்கையை கொண்டாடும் ஒரே இனம் தமிழினம் தான். வாழ்க்கைக்கும், முன்னேற்றத்திற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் இனமும் தமிழினம் தான். குறிப்பாக உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் பெரும் பொங்கல் நாளுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் என்ற விழாவை நடத்தி, அதில் மாடுகளை அலங்கரித்து விருந்து படைப்பது வழக்கம். இந்த உன்னத செயல்களுக்கும் தமிழர்கள் பயன்படுத்திய கருவி தான் பொங்கல் ஆகும். உழைப்பாளிகளுக்கும் கொண்டாட்டங்கள் தேவை என்பதை உலகிற்கு உணர்த்தும் திருநாள் தைப்பொங்கல் ஆகும். அந்த வகையில் அது சிறப்பானது.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நடவடிக்கைகள் தேங்கிக் கிடக்கின்றன; சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயம் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தினாலும், அரசின் காதுகளில் அது விழவில்லை; வன்னியர்களுக்கு இடஓதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு பச்சைக்கொடி காட்டி இரு ஆண்டுகளாகியும் வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்க வார்த்தை அளவில் சமூகநீதி பேசும் ஆட்சியாளர்களுக்கு மனம் வரவில்லை. இந்தத் தடைகளையெல்லாம் தைத் திருநாள் தகர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பது தான் நமது எதிர்பார்ப்பு. அது நிச்சயம் நிறைவேறும்.

தமிழ்நாடு மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிலும் உள்ள அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும்; அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம் ஆகியவை செழிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைத்திருநாளும், தமிழ்ப் புத்தாண்டும் எல்லா நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


Next Story