மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக் சாவு


மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக் சாவு
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:46 PM GMT)

வில்லுக்குறி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

வில்லுக்குறி அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை மிரட்டுவதற்காக தீக்குளித்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

வெளிநாட்டில் வேலை

குமாரபுரம் அருகே உள்ள தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மைக்கேல் பிரின்ஸ் (வயது39), மெக்கானிக். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஸ்ரீகுமாரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

மைக்கேல் பிரின்ஸ் கடந்த ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். இதன்பின்பு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், ஸ்ரீகுமாரி கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் வில்லுக்குறி அருகே குதிரைபந்தி விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அத்துடன் வில்லுக்குறி பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

தீக்குளித்தார்

இந்தநிலையில் சம்பவத்தன்று மைக்கேல் பிரின்ஸ் மனைவியின் வீட்டுக்கு சென்று தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு அழைத்தார். ஆனால் மனைவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

அப்போது மைக்கேல் பிரின்ஸ் 'நீ குடும்பம் நடத்த வரவில்லை என்றால் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன்' என மிரட்டினார். அத்துடன் ஒரு கட்டத்தில் கையில் வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து தன்மீது ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை ஸ்ரீகுமாரி மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைக்கேல் பிரின்ஸ் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story