மருத்துவக் கலந்தாய்வு: புதிய நடைமுறை அறிமுகம் - மருத்துவ கல்வி இயக்குநரகம்


மருத்துவக் கலந்தாய்வு: புதிய நடைமுறை அறிமுகம் - மருத்துவ கல்வி இயக்குநரகம்
x

மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சென்னை,

மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், எஞ்சிய 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்த உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை ஓரிரு நாளில் வெளியாகும். மாணவர்கள் அடுத்த வாரம் முதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.

நடப்பு ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மருத்துவக் கலந்தாய்வின்போதே, இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக்குழுவிடம் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்திட வேண்டும்.

இதன்மூலம் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும்.

மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும் என்றும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


Next Story