மருத்துவ கலந்தாய்வு: 67 வயது முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


மருத்துவ கலந்தாய்வு: 67 வயது முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரிய 67 வயது முதியவரின் கோரிக்கையை பரிசீலிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கோரி பி.யு.சி. முடித்த 67 வயதான முனுசாமி என்பவர் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீட் தேர்வில் 720 க்கு 408 மதிப்பெண்கள் பெற்றுள்ளதாகவும் அரசு பள்ளி மாணவர்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் கலந்து கொள்வது குறித்து பரிசீலிக்க கோரி தேர்வு குழுவுக்கு மனு அனுப்பியதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. தேர்வுக்குழு தரப்பில், மனுதாரர் பிளஸ்-2 படிக்காத காரணத்தால் அவரை கலந்தாய்வில் அனுமதிக்கவில்லை என விளக்கமளிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், நீட் தேர்வுக்கான கல்வித்தகுதி என்ன? வயது வரம்பு என்ன? எனக் கேள்விகளை எழுப்பினர். அதற்கு தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், ப்ளஸ் 2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் படித்திருக்க வேண்டும் எனவும், மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது உச்ச வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இரண்டாவது சுற்று கலந்தாய்வுக்கு முன், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என மருத்துவ மாணவர் சேர்க்கை குழுவுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story