குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி


குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பலி
x

புதுக்கோட்டையில் குளத்தில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியாகினார். பக்கத்து வீட்டு சிறுவனின் சைக்கிளை மீட்க முயன்ற போது பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை

கூலித்தொழிலாளி

புதுக்கோட்டை திருவப்பூர் மகாராஜபுரத்தை சேர்ந்தவர் வீரமணி (வயது 40). இவர் கல்லுப்பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவரது வீட்டின் அருகே உள்ள ஒரு சிறுவன் நேற்று தனது சைக்கிளை குன்னவயலில் உள்ள கல்குவாரி குளத்திற்கு கொண்டு சென்று கழுவியிருக்கிறார். அப்போது சைக்கிள் குளத்தில் மூழ்கியது. இதனால் அந்த சைக்கிளை மீட்க முடியாமல் சிறுவன் வீட்டிற்கு திரும்பினார்.

இதுகுறித்து வீரமணியிடம் சிறுவன் கூறிய போது இன்று காலை தான் சைக்கிளை எடுத்து தருவதாக கூறினார். மேலும் சிறுவனோடு வீரமணியும் சென்றார். அங்கு குளத்தில் மூழ்கி சைக்கிளை தேடினார். ஆனால் தண்ணீருக்குள் மூழ்கியவர் நீண்டநேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால் சிறுவன் அதிர்ச்சியடைந்தான். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். மேலும் தகவல் அறிந்த திருக்கோகர்ணம் போலீசாரும் விரைந்து வந்தனர்.

பிணமாக மீட்பு

குளத்தில் மூழ்கியவரை மீட்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் குளத்தில் இறங்கி வீரமணியை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவரது உடலை பார்த்ததும் குடும்பத்தினர், உறவினர்கள் கதறி அழுதனர். குளத்தில் மூழ்கி இறந்த வீரமணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story