மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள்


மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள்
x

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை காப்பாற்றும் வழிமுறைகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் விளக்கம் கூறினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

சீர்காழி வட்டார வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்களை காப்பாற்ற தண்ணீரை வடிய வைத்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்ய வேண்டும். நீரில் மூழ்கிய பயிர்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்படலாம். அதனை சரி செய்ய ஏக்கருக்கு 22 கிலோ யூரியா உடன் 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இடவேண்டும். போதிய அளவு வெளிச்சம் தென்பட்ட பிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் 1 கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும். நெற்பயிரில் குலை நோயின் சிறு புள்ளிகள் காணப்பட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்ட்சிம் பூஞ்சானகொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து அதாவது யூரியாவை உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மைய வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story