மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஆய்வு


மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர் ஆய்வு
x
தினத்தந்தி 3 March 2023 7:30 PM GMT (Updated: 3 March 2023 7:30 PM GMT)
சேலம்

மேட்டூர்:-

மேட்டூரில் இருந்து குஞ்சாண்டியூர் வரை உள்ள நெடுஞ்சாலையில் குஞ்சாண்டியூரில் இருந்து தங்கமாபுரி பட்டணம் வரை உள்ள சாலையை இருபக்கங்களிலும் அகலப்படுத்த வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும், அகலப்படுத்த விட்டால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதுடன் உயிர் இழப்பும் ஏற்படுகிறது என்று மேட்டூரை சேர்ந்த வக்கீல் செந்தில்குமார், மேட்டூர் சட்டப்பணிகள் குழுவிடம் மனு அளித்து இருந்தார்.

இந்த மனு குறித்து நடவடிக்கை எடுக்க மேட்டூர் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், மேட்டூர் சார்பு நீதிபதியுமான முத்துராமன், குஞ்சாண்டியூர், ராம நகர் பஸ் நிறுத்தம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். நெடுஞ்சாலை துறை சார்பில் இந்த இடங்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செல்வத்திடம் கேட்டு அறிந்தார். மேலும் இந்த சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்தும் கலந்தாலோசித்தார்.

ஆய்வின்போது, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மணிவர்மா, கருமலைக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுமார், வக்கீல் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story