மிலாடி நபி, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம் -தமிழக அரசு அறிவிப்பு


மிலாடி நபி, காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை: 1,100 சிறப்பு பஸ்கள் இயக்கம் -தமிழக அரசு அறிவிப்பு
x

மிலாடி நபி, காந்தி ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்களால் ஏற்பட்டுள்ள தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரத்து 100 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது.

சென்னை,

நாளை (வியாழக்கிழமை) மிலாடி நபி, 30-ந் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 2-ந் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து விடுமுறை கிடைப்பதால் பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பயணிகள் முன்பதிவும் கூடுதலாகவே உள்ளது. இதனால் வெளியூர் செல்ல திட்டமிடும் பயணிகள் தங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன்படி முன்பதிவு செய்வதன் மூலம் பயணிகளின் கூடுதல் தேவையை அறிந்து அதற்கு ஏற்றவாறு கூடுதல் பஸ்களை போக்குவரத்து கழகங்கள் இயக்க திட்டமிட இயலும்.

சிறப்பு பஸ்கள்

மேலும், பயணிகள் சிரமம் இன்றி பயணிக்கவும், பாதுகாப்பாக திட்டமிட்டபடி பயணிக்கவும் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன் இன்றைய தேதியில் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை வரை பயணிகள் அதிகளவில் முன்பதிவு செய்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுநாள் வரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள 27-ந் தேதி (இன்று) 16 ஆயிரத்து 980 பயணிகளும், 29-ந் தேதிக்கு 14 ஆயிரத்து 473 பயணிகளும் மற்றும் அக்டோபர் 3-ந் தேதிக்கு 7 ஆயிரத்து 919 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இவற்றை கருத்தில் கொண்டு பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 27-ந் தேதி (இன்று) தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 250 பஸ்களும் 29-ந் தேதி 450 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

1,100 பஸ்கள் இயக்க திட்டம்

இதுதவிர பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் என மொத்தம் ஆயிரத்து 100 பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதுமட்டுமின்றி, அக்டோபர் 2-ந் தேதி (திங்கட்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 17 ஆயிரத்து 242 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் tnstc செயலி மூலமும் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story