பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2023 10:45 PM GMT (Updated: 18 Oct 2023 10:45 PM GMT)

கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தீவனங்கள், கால்நடைகள் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் தனியார் நிறுவனங்களின் பால் கொள்முதல் விலையை விடவும் ஆவின் நிறுவனத்தின் கொள்முதல் விலை குறைவாக உள்ளது. எனவே, பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.45, எருமை பாலுக்கு ரூ.54 வழங்க வேண்டும். 1 லிட்டருக்கு ரூ.1 வீதம் ஊக்கத்தொகை அறிவித்ததை மறுபரிசீலனை செய்து ஒரு லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை அறிவிக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் ஐ.எஸ்.ஐ. விதியை பயன்படுத்தி தரம் நிர்ணயம் செய்வது போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். தரமான கால்நடை தீவனங்களை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் ஜெய்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பெருமாள், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story