மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் சுரங்க ரெயில் நிலையம் - விரைவில் பணிகள் தொடக்கம்


மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் சுரங்க ரெயில் நிலையம் - விரைவில் பணிகள் தொடக்கம்
x

மயிலாப்பூரில் 4 அடுக்குகளில் கூடிய சுரங்க மெட்ரோ ரெயில் நிலையத்துக்கான ஆரம்பக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

சென்னை,

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் ரூ.61 ஆயிரத்து 841 கோடியில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகின்றன. இந்த திட்டத்தில் மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை (3-வது வழித்தடம்) 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை (4-வது வழித்தடம்) 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்- சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) 47 கி.மீ. தொலைவுக்கும் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெறுகின்றன. 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சுரங்கம் மற்றும் உயர்த்தப்பட்ட பாதைகளில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் நாட்டிலேயே முதன் முறையாக, மயிலாப்பூரில் தரையிலிருந்து 115 அடி ஆழத்தில் 4 அடுக்குகளில் மெட்ரோ ரெயில் நிலையம் அமையவுள்ளது. அதாவது, 3 நடைமேடைகளுடன் ஆழமான மெட்ரோ ரெயில் நிலையமாக கட்டப்படவுள்ளது. இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை விரைவில் தொடங்க மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் 3-வது மற்றும் 4-வது வழித்தடத்துக்கான பரிமாற்ற நிலையமாக இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இங்கு பொதுத்தளம், வணிக அலுவலகம், மேல் நடைமேடை, கீழ்நடைமேடை என 4 நிலைகளுடன் தரைக்கு கீழே 35 மீட்டர் (115 அடி) ஆழத்தில் கீழ் நடைமேடை அமையவுள்ளது.

மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் அமைப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்த நிலையத்தில் 115 அடி (35 மீட்டர்), 78 அடி (24 மீட்டர்) மற்றும் 55 அடி (17 மீட்டர்) ஆழத்தில் 3 அடுக்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர, பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதற்கான தளத்துடன் பொதுத்தளம் இந்த ரெயில் நிலையத்தில் அமையவுள்ளது.

மயிலாப்பூரில் போதிய நிலம் மற்றும் சாலை அகலம் இல்லாததால், ஆழமான ரெயில் நிலையமாக கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையம் திறக்கப்படும் போது, அது மிகப்பெரிய பொறியியல் அற்புதமாக இருக்கும்.

மயிலாப்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தின் முதல் தளத்தில் (தரையிலிருந்து 55 அடி ஆழத்தில்) மாதவரம் - சிறுசேரி சிப்காட் செல்லும் மேல்தளப்பாதை ரெயில்களும், 2-ம் தளத்தில் (தரையிலிருந்து 78 அடியில்) கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி செல்லும் ரெயில்களும், 3-ம் தளத்தில் (தரையிலிருந்து 115 அடியில்) மாதவரம் - சிப்காட் செல்லும் கீழ்ப்பாதை ரெயில்களும் வந்து செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

மயிலாப்பூர் (திருமயிலை) மெட்ரோ ரெயில் நிலையத்தில் 2 வழித்தடங்களை இணைக்கும் முக்கியமான நிலையமாக இருக்கும். இந்த நிலையம் தற்போதுள்ள ஆலந்தூர், சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையங்கள் போல அமைக்க உள்ளோம். இதற்கான ஆரம்பக் கட்ட பணிகளை விரைவில் தொடங்கவுள்ளோம். இந்த நிலையத்தை சுற்றிலும் 4 சுரங்கப்பாதை அமைக்கும் சுரங்கம் தோண்டும் எந்திரங்கள் வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட உள்ளன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story