ஓசூர் பகுதியில் ரூ.1¾ கோடியில் சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்புகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்


ஓசூர் பகுதியில்  ரூ.1¾ கோடியில் சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்புகள்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
x

ஓசூர் பகுதியில் ரூ.1¾ கோடியில் சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்புகள் மற்றும் சுகாதார நல மையங்களை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் பகுதியில் ரூ.1¾ கோடியில் சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்புகள் மற்றும் சுகாதார நல மையங்களை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

சுகாதார நல மையங்கள்

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி, அத்திமுகம், தடிக்கல், கோட்டை உளிமங்கலம், தளி, வி.மாதேப்பள்ளி ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார நிலையம், செவிலியர் குடியிருப்பு மற்றும் சுகாதார நல மையங்கள் திறப்பு விழா பேரண்டப்பள்ளி துணை சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கிருஷ்ணகிரி எம்.பி. டாக்டர் செல்லகுமார், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.

விழாவில் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத்தார்.

மருந்து தட்டுப்பாடு இல்லை

பின்னர் அவர் பேசுகையில், இதுபோன்ற கிராம பகுதிகளில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் தடுப்பூசிகளை சேமித்து வைப்பதும், இந்த மையங்களுக்கு குழந்தைகளை வரவழைத்து தடுப்பூசி போடுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு என்பது கற்பனையாக பரவிய வதந்தி. தமிழகத்தில் எங்கும் மருந்து தட்டுப்பாடு இல்லை. எங்காவது கொள்முதல் செய்து அனுப்புவதற்கு சிறிது காலதாமதம் ஏற்பட்டிருந்தால் மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் மருந்துகளை கொள்முதல் செய்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மருந்துகளின் அவசியத்தை உணர்ந்து தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் மருந்து கிடங்கு கட்டுவதற்கு பட்ஜெட்டில் முதல்-அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி 32 மாவட்டங்களில் மருந்து கிடங்கு கட்டப்பட்ட நிலையில் மீதமுள்ள மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ரூ.5 கோடி வீதம் மருந்து கிடங்கு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இதையடுத்து கர்ப்பிணிகள் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். இதில் பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், மருத்துவத்துறை துணை இயக்குனர் செல்வ விநாயகம், ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவகுமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பி.எஸ்.சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், நாகேஷ், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முருகன், செங்குட்டுவன், முன்னாள் எம்.பி. சுகவனம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சுகாதார பிரிவு உதவி இயக்குனர் கோவிந்தன் வரவேற்றார். முடிவில் சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா நன்றி கூறினார்.


Next Story