10 மணி நேரம் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.. நள்ளிரவில் ஆசிரியர்களுக்கு முக்கிய கோரிக்கை


தினத்தந்தி 22 Jun 2023 8:39 PM GMT (Updated: 22 Jun 2023 10:17 PM GMT)

ஆசிரியர்கள் நல்ல தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை,

சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆசிரியர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் தொடங்கிய இந்த ஆலோசனைக்கூட்டம் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.

இந்த நிலையில் நள்ளிரவில் நிறைவுபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

"நிறைவேற்ற முடியாத சில கோரிக்கைகளை மாற்று வழியில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இன்றும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அவற்றை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.

சனிக்கிழமை அடுத்த கட்ட ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். கோரிக்கைகள் அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க காத்திருக்கிறோம். இன்று வந்த ஆசிரியர்களில் எங்களை வாழ்த்திப் பேசியவர்களும் இருக்கின்றனர். விமர்சனம் செய்தவர்களும் இருக்கின்றனர். எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறோம்.

ஆசிரியர்கள் வைக்கின்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது எங்கள் பணி. அதேபோல ஆசிரியர்கள் நல்ல தேர்ச்சி முடிவுகளை வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்கிறேன்" என்று கூறினார்.


Next Story