ஏரிகள், ஆறுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை


ஏரிகள், ஆறுகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
x

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தான அவசர ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

சென்னை,

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்தான அவசர ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச்செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, நீர்வளத்துறை முதன்மை தலைமை என்ஜினீயர் ஏ.முத்தையா, சென்னை மண்டல தலைமை என்ஜினீயர் கு.அசோகன், தலைமை என்ஜினீயர் க.பொன்ராஜ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்வளத்துறையால் பராமரிக்கப்படும் செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம், பூண்டி உள்ளிட்ட ஏரிகளிலும், அடையாறு ஆறு, கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் கால்வாய் மற்றும் பிற நீர்வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டறிந்தார். மேலும் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வந்துள்ள மத்திய குழு வல்லுனர்களிடம் விரிவான விவரங்களை சமர்ப்பிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், 2024-25-ம் ஆண்டு நீர்வளத்துறை மூலம் மேற்கொள்ளப்படவுள்ள முக்கிய வரைவுத்திட்டங்களுக்கான தேவைப்படும் நிதியினை முன்மொழிவது தொடர்பாகவும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.


Next Story