அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு


அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு; சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு
x
தினத்தந்தி 18 July 2023 6:01 AM GMT (Updated: 18 July 2023 6:39 AM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அவரது வீட்டில் விசாரணை நடத்திய பிறகு நள்ளிரவில் கைது செய்தனர்.

அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய பைபாஸ் அறுவை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நிஷாபானு மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் இந்த வழக்கு 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன்பு நடைபெற்றது.

மூன்றாவது நீதிபதி சி.வி.காா்த்திகேயன் கடந்த வாரம் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில் " கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். கைது செய்யப்பட்டால் நீதிமன்ற காவல் எடுக்க வேண்டியது அவசியம். அமலாக்கத் துறைக்குக் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார்.

செந்தில் பாலாஜியின் சிகிச்சை நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாகக் கருத முடியாது. சிகிச்சைக்குப் பிறகு காவல் எடுக்கலாம். அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை எதிர்க்காத நிலையில், அதன் பின் நடக்கும் சோதனை, விசாரணை ஆகியவற்றை எதிர்க்க முடியாது. கைது சட்டப்பூர்வமானது. நீதிமன்ற காவல் சட்டப்பூர்வமானது. எனவே இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனக் கூறி நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பில் உடன்படுவதாக நீதிபதி சி.வி.காா்த்திகேயன் தெரிவித்தார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பு தொடர்பாக அமலாக்கத்துறை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தது. நேற்று மாலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை காவேரி மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.


Next Story