அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு : 3-வது நீதிபதிக்கு பரிந்துரை


அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு:  இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு  : 3-வது நீதிபதிக்கு பரிந்துரை
x
தினத்தந்தி 4 July 2023 5:18 AM GMT (Updated: 4 July 2023 5:34 AM GMT)

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 2011-ம் ஆண்டு முதல், 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, 81 போிடம் பணம் பெற்று, ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் அடிப்படையில், 2018-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசார் மோசடி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமீன் பெற்றதால் அவரை கைது செய்யவில்லை. அவர் அப்போது வழக்கு விசாரணைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னிலையில் ஆஜர் ஆனார்.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கப்பட்டதாகவும், இதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும், என்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று செந்தில்பாலாஜி உள்ளிட்ட இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும், லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும், 2 மாதத்தில் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் உத்தரவிட்டது.

மேலும் முறைகேடாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உள்ளிட்டவர்கள் மீது அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து வருமானவரித்துறை சோதனை, அமலாக்கத்துறை சோதனை நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில்பாலாஜி சந்தித்தார். மேலும் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது மயங்கி விழுந்தார். பின்னர் இருதயத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்ததால், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்டு அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்ற காவலில் தற்போது உள்ளார்.

லஞ்ச வழக்கு பாய்ந்தது

இந்த நிலையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்து அடுத்த கட்ட விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதிய வழக்கில் 178 பேருக்கு சம்மன் அனுப்பி அதில் 58 பேரிடம் விசாரணை நடத்தி விட்டதாகவும், மீதி 120 பேரிடம் விசாரிக்க உள்ளதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

செந்தில் பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாகவும், உடல் நிலை தேறியதும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத காவலில் வைத்ததாக கூறி செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த மனு மீதான தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்ப்பு வழங்கப்படும் என ஐகோர்ட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இன்று நடந்த விசாரணையின் போது இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கி உள்ளனர்.

இதன்படி ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்ட விரோதம் என்றும், அவரை உடனடியாக விடுவிக்கலாம் என்றும் நீதிபதி நிஷா பானு தெரிவித்தார்.

ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம் என்றும், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார். மேலும் மருத்துமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது தொடர்பாக மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம் என்றும் சிகிச்சையில் இருக்கும் நாட்கள் நீதிமன்ற காவலாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் இரு நீதிபதிகளின் இந்த மாறுபட்ட தீர்ப்பினால் 3-வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன்படி 3-வது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்து வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது.

3-வது நீதிபதி நியமிக்கப்பட்டு அவர் மூலம் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும், 3-வது நீதிபதி அளிக்கும் தீர்ப்பே செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடந்த ஆட்கொணர்வு மனுவில் தீர்ப்பாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story