70 ஆண்டு காலமாக பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார் -கே.எஸ்.அழகிரி பேட்டி


70 ஆண்டு காலமாக பெரியார், கருணாநிதி பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி பேசியுள்ளார் -கே.எஸ்.அழகிரி பேட்டி
x

70 ஆண்டு காலமாக பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் பேசியதைத்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றதை நினைவு கூரும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் நினைவு பேரணி நடத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை தபால் நிலையம் அருகே தொடங்கி தண்டையார்பேட்டை பஸ் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேரணியை தொடங்கி வைத்ததோடு, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியில், இந்திய ஒற்றுமை பயணத்தில் தமிழ்நாட்டில் இருந்து கலந்து கொண்டு ராகுல்காந்தியுடன் நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதில், மாநில துணை தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, எஸ்.ஏ.வாசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெரம்பூர், காரப்பாக்கம்

முன்னதாக, வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் டில்லி பாபு தலைமையில் பெரம்பூரில் நடைபெற்ற பேரணியை கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார். அதேபோன்று, தென்சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் தலைமையில் காரப்பாக்கம் முதல் போரூர் ரவுண்டானா வரை பேரணி நடைபெற்றது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் தலைமையில் வாலாஜாசாலை முதல் ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை நடைபெற்ற பேரணியை, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொடங்கி வைத்தனர். எஸ்.சி.பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் தலைமையில், புளியந்தோப்பு காந்தி சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை பேரணி நடைபெற்றது.

ஏன் குதிக்கிறார்கள்

பெரம்பூரில் பேரணியை தொடங்கி வைத்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறும்போது, "நாட்டில் சாதி, மத, மொழியின் பெயரால் மக்களை பிரிக்கிறார்கள். இன்றைக்கு இந்தியா வல்லரசாக உள்ளது என்று சொன்னால் அதற்கு காங்கிரஸ் கட்சியின் தியாகம்தான் காரணம். தற்போது, இந்தியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. எல்லா கட்சிகளும் இதில் இணைந்துள்ளார்கள். கண்டிப்பாக இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி அடையும். 70 ஆண்டு காலமாக பெரியார் எதை பேசினாரோ அண்ணா எதை பேசினாரோ கருணாநிதி எதை பேசினாரோ அதைத்தான் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பேசியுள்ளார். இதற்கு ஏன் பா.ஜ.க.வினர் இப்படி குதிக்கிறார்கள் என தெரியவில்லை" என்றார்.


Next Story