அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு - பாஜக தலைவர் அண்ணாமலை


அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு - பாஜக தலைவர் அண்ணாமலை
x
தினத்தந்தி 12 Sep 2023 2:18 AM GMT (Updated: 12 Sep 2023 8:28 AM GMT)

பாரத் பெயர் மாற்றப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மதுரை.

மதுரை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சனாதனத்தை எதிர்ப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் அப்படி பேசினால் நல்லதுதான். அப்போதுதான் பாஜக வளரும். திமுகவின் குடும்ப அரசியல், ஒவ்வொரு நாளும் நிரூபணமாகி கொண்டிருக்கிறது. தகுதி இல்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் குடும்ப அரசியல் மூலம் அமைச்சர்கள் ஆகிறார்கள்.

உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு பரிசுத்தொகை அறிவித்தது தவறு. ஒருவரின் தலைக்கு விலை வைப்பேன் என்றால் அவர் ஒரு போலி சாமியாராக தான் இருக்கமுடியும். உண்மையான சனாதனம் பற்றி அவருக்கு தெரியாமல் இருக்கும். ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. தலைக்கு விலை வைப்பதற்கு யார் அவர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாரத் பெயர் மாற்றப்படுவதால் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. அரசியலமைப்பு அறிஞர்கள் கூட இந்தியாவை பாரத் என்றும், பாரத் என்பதை இந்தியா என்றும் உபயோகிப்பதால் எந்தவித சட்ட சிக்கலும் ஏற்படாது என்று சொல்கிறார்கள். இந்தியாவை பாரத் என்று ஒரு சில இடங்களில் பிரதமர் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தியுள்ளார். எதிர்க்கட்சியைப் பொறுத்தவரை இந்தியா என்ற பெயரை வைத்ததனால் தான், பாரத் என பெயர் மாற்றுவதாக நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story