சென்னையில் கொசு ஒழிப்பு பணிக்காக கைத்தெளிப்பான்கள் - டிரோன் எந்திரங்கள் - மாநகராட்சி பணியாளர்களிடம் அமைச்சர்கள் வழங்கினர்


சென்னையில் கொசு ஒழிப்பு பணிக்காக கைத்தெளிப்பான்கள் - டிரோன் எந்திரங்கள் - மாநகராட்சி பணியாளர்களிடம் அமைச்சர்கள் வழங்கினர்
x

சென்னையில் கொசு ஒழிப்பு பணிக்காக வாங்கப்பட்ட கைத்தெளிப்பான்கள் - டிரோன் எந்திரங்களை மாநகராட்சி பணியாளர்களிடம் அமைச்சர்கள் வழங்கினர்.

சென்னை

சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் மாநகராட்சி சார்பில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் மொத்தம் 3,312 தற்காலிக, நிரந்தர பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கொசு ஒழிப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மழைநீர் கால்வாய்களில் கொசுப்புழு நாசினி தெளிப்பதற்காக ஒரு கோட்டத்துக்கு ஒரு கைத்தெளிப்பான் வீதம் 200 கோட்டங்களிலும் மூலதன நிதி மற்றும் சமூக பங்களிப்பு நிதி என மொத்தம் ரூ.98 லட்சம் மதிப்பிலான 200 புதிய கைத்தெளிப்பான்களும், நீர்வழித்தடங்களில் கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ள 6 டிரோன் எந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன.

இந்த எந்திரங்களை நேற்று ரிப்பன் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் மாநகராட்சி பணியாளர்களிடம் வழங்கினர்.

இதையடுத்து வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரித்து பெறுவதற்காக பேட்டரியால் இயங்கும் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பச்சை மற்றும் நீல நிறத்திலான 20 ஆயிரம் புதிய குப்பைத்தொட்டிகளையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். பின்னர் அந்த குப்பை தொட்டிகள், மண்டல வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story