வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் -தமிழக அரசு உத்தரவு


வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் -தமிழக அரசு உத்தரவு
x

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. இதன்படி காஞ்சீபுரத்துக்கு தா.மோ.அன்பரசனும், திருவள்ளூருக்கு ஆர்.காந்தியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொறுப்பு அமைச்சர்கள்

மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று போன்ற நேரங்களில் அவசரகால பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து விரைவுபடுத்தவும், சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.

அதில் சில மாற்றங்கள் செய்து ஆணை வெளியிடப்படுகிறது.

ஆர்.காந்தி

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆர்.காந்தி (கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்), திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி (உணவு மற்றும்உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர்), கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த மெய்யநாதன் (சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்) மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார். சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, நாகை மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்படுகிறார்.

என்ன பொறுப்பு?

வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்க அமைச்சர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மாவட்டமும், அமைச்சரும்

சேலம் மாவட்டம் - அமைச்சர் கே.என். நேரு; தேனி - அமைச்சர் ஐ. பெரியசாமி; திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - அமைச்சர் எ.வ.வேலு; தர்மபுரி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்; தென்காசி - சாத்தூர் ராமச்சந்திரன்; ராமநாதபுரம் - அமைச்சர் தங்கம் தென்னரசு;

காஞ்சீபுரம் - அமைச்சர் தா.மோ. அன்பரசன்; நெல்லை - அமைச்சர் ராஜ கண்ணப்பன்; மயிலாடுதுறை - அமைச்சர் மெய்யநாதன்; கோவை - அமைச்சர் செந்தில்பாலாஜி; கிருஷ்ணகிரி - அமைச்சர் சக்கரபாணி; திருவள்ளூர் - அமைச்சர் ஆர். காந்தி;

பெரம்பலூர் - அமைச்சர் சிவசங்கர்; தஞ்சாவூர் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி; நாகை - அமைச்சர் ரகுபதி.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story