சிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம்


சிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

சிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

நிதி ஒதுக்கீடு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. திருச்சி மாவட்டத்துக்கு 2023-24-ம் ஆண்டுக்காக சிறுபான்மை இன மக்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.4 கோடியே 55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்துக்கு 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

வட்டி விகிதம்

தனிநபர் கடன் திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், தனிநபர் கடன் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம், ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழு கடன் திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் ஒரு நபருக்கு ரூ.1½ லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

கல்வி கடன் திட்டம்

மேலும், சிறுபான்மை மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக கல்வி கடன் திட்டம் 1-ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், கல்வி கடன் திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதமும், மாணவிகளுக்கு 5 சதவீதமும் என ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.எனவே திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

சிறுபான்மையினர் கடன் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது, பள்ளி மாற்றுச்சான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story