சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் மோசடி


சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 25 Feb 2023 6:45 PM GMT (Updated: 25 Feb 2023 6:46 PM GMT)

ஓசூரில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூரில் சாப்ட்வேர் என்ஜினீயரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாப்ட்வேர் என்ஜினீயர்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தர்கா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது43). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த 23-ந் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில், உங்கள் வங்கி கணக்கின் வாடிக்கையாளர் விவரங்களை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை. உடனடியாக பூர்த்தி செய்யுங்கள் எனக்கூறி ஒரு இணையதள லிங் இருந்தது.

அதை நம்பிய கணேஷ், அந்த இணையதள லிங்கில் அனுப்பிய விண்ணப்பத்தில், தனது வங்கி விவரங்கள், ஆதார், பான் எண்கள் ஆகியவற்றை இணைத்து அனுப்பி உள்ளார். அதன் பின்னர் அவரது வங்கி கணக்கிற்கு சிறிது நேரத்தில் ரூ.25 லட்சம் வந்துள்ளது. இதை அவர் கவனிக்கவில்லை. பின்னர் கணேஷ் வங்கி கணக்கில் இருந்து அடுத்தடுத்து 3 தவணைகளாக மொத்தம் 13 லட்சத்து 99 ஆயிரத்து 500 எடுக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இதையும் அவர் உடனடியாக கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து மொபைல் மெசேஜை பார்த்த கணேஷ் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு வங்கியில் இருந்து பேசியவர்கள், நீங்கள் 'இன்ஸ்டன்ட் லோன்' கேட்டு விண்ணப்பித்துள்ளீர்கள். உங்கள் சம்பளத்தின் அடிப்படையில், 25 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளீர்கள் என கூறியுள்ளனர்.

மேலும் கணேஷ், வங்கிக்கு சென்று நடந்த விவரங்களை கூறினார். தொடர்ந்து அவர் இந்த மோசடி குறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story