மூக்கனூர் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்


மூக்கனூர் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 10 April 2023 6:45 PM GMT (Updated: 10 April 2023 6:45 PM GMT)

முறைகேடு நடைபெற்றுள்ளதை அடுத்து மூக்கனூர் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

முறைகேடு நடைபெற்றுள்ளதை அடுத்து மூக்கனூர் ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்து கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். மேலும் ஊராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுமக்கள் புகார்

சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் மூக்கனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட வீடுகள் மற்றும் இதர திட்டங்களில் முறைகேடு நடைபெற்றதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

இந்த புகார் சம்பந்தமாக விசாரணை நடத்த உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா மற்றும் உதவி திட்ட அலுவலர் ராஜசேகர்(வீடுகள் மற்றும் சுகாதாரம்) ஆகியோருக்குகலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

முறைகேடு

இதையடுத்து அவர்கள் நடத்திய விசாரணையில் பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா திட்ட வீடுகள் கட்டும் திட்டத்தில் முறைகேடு, தீர்மானப்பதிவேடு, தெருமின் விளக்குகள் பராமரிப்புக்கு கூடுதல் செலவினம் செய்தது ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதை கண்டு பிடித்தனர். மேலும் ஊராட்சியில் 1 முதல் 31 பதிவேடுகள் முறையாக பராமரிக்காதது, செலவின சீட்டுகள் இல்லாமல் செலவினம் மேற்கொண்டதும் கண்டறியப்பட்டது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

எனவே தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டப் பிரிவின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மற்றும் முறைகேடு செய்வதற்கு துணையாக இருந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாந்தா அர்ச்சுனன் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஊராட்சி பணிகளையும், கணக்குகளையும் சரிவர மேற்கொள்ளாத காரணத்தால் ஊராட்சி செயலாளர் செல்லதுரையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார். மேலும் இப்பணிகளை கவனிக்க தவறிய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுபோன்று முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story