சரக்கு வேன் மீது மொபட் மோதல்; பள்ளி மாணவி சாவு


சரக்கு வேன் மீது மொபட் மோதல்; பள்ளி மாணவி சாவு
x

கண்ணமங்கலம் அருகே சரக்கு வேன் மீது மொபட் மோதியதில் மாணவி உயிரிழந்தாள். அவரது அக்காள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம் அருகே சரக்கு வேன் மீது மொபட் மோதியதில் மாணவி உயிரிழந்தாள். அவரது அக்காள் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறாள்.

சரக்கு வேன் மீது மொபட் மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள அம்மாபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகள்கள் டில்லிராணி (வயது 9), ஜெயசுதா (15). டில்லிராணி கண்ணமங்கலம் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் அக்காள்-தங்கை இருவரும் மொபட்டில் கண்ணமங்கலம் நோக்கி சென்றனர். மொபட்டை ஜெயசுதா ஓட்டினார்.

அம்மாபாளையம் கூட்ரோடு பகுதியில் சென்ற போது, முன்னால் சென்ற சரக்கு வேன் திடீரென திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக சரக்கு வேனின் பின்புறம் மொபட் மோதியது. இதில் அக்காள்-தங்கை இருவரும் படுகாயம் அடைந்தனர்.

தங்கை சாவு

உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி டில்லிராணி பரிதாபமாக உயிரிழந்தாள். ஜெயசுதா சிகிச்சை பெற்று வருகிறாள்.

இந்த சம்பவம் தொடர்பாக லோகநாதன் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அல்லிராணி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story