புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்


புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்
x

கோடை விடுமுறையில் இதுவரை புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகத்தை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாா்வையிட்டனர்.

புதுக்கோட்டை

அரசு அருங்காட்சியகம்

புதுக்கோட்டை அரசு அருங்காட்சியகம் மிகவும் பழமையானது. தமிழகத்தின் 2-வது பெரிய அரசு அருங்காட்சியகம் ஆகும். இதில் தொல்லியல், மானிடவியல், நாணயவியல், கலைகள், விலங்கியல், தாவரவியல், புவி அமைப்பியல், தொழிற்கலைகள் உள்ளிட்ட பிரிவுகளில் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பண்டைய காலத்திலான பொருட்கள் கூட பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விலங்கியல் தொடர்பான உயிரினங்கள் பதப்படுத்தப்பட்டு உயிரோட்டமாக காட்சியளிக்கிறது. அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. அரசு அருங்காட்சியகத்தில் தற்போது புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பக்கத்தில் அதே வளாகத்தில் பொருட்கள் அனைத்தும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

3 ஆயிரம் பேர் பார்வை

இந்த நிலையில் தற்போது கோடை விடுமுறையில் அரசு அருங்காட்சியகத்திற்கு பொதுமக்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக தங்களது குழந்தைகளை பெற்றோர் அதிகமாக அழைத்து வந்துள்ளனர். சிறுவர், சிறுமிகளும் ஆர்வமுடன் அரிய வகை பொருட்களையும், விலங்கின வகைகளையும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

எந்திர டைனோசரையும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இதனால் நாள்தோறும் பார்வையாளர்கள் வருகை அதிகரித்தப்படி உள்ளது. ஒரு நாளைக்கு 100 முதல் 150 பேர் வருகை தருகின்றனர். இதற்கு முன்பு மற்ற நாட்களில் இவற்றின் எண்ணிக்கையை விட வெகு குறைவாகும். அரசு அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்கு, பெரியவர்களுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோடை விடுமுறையில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story