சொத்து தகராறில் தாய், மகன் தற்கொலை


சொத்து தகராறில் தாய், மகன் தற்கொலை
x

ஜேடர்பாளையம் அருகே சொத்து தகராறில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சொத்து தகராறு

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் குழந்தாகவுண்டர். இவருடைய மனைவி பாவாயி (வயது 75). இவருடைய மகன் ராசு (55), விவசாயி. இவரது மனைவி சாந்தி (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

சொத்து விற்பது தொடர்பாக பாவாயிக்கும், அவருடைய மகன் ராசுவிற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நிலத்தை விற்பதற்கு பாவாயி கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் மகனுடன் இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாவாயி மனமுடைந்து காணப்பட்டு உள்ளார்.

அடுத்தடுத்து தற்கொலை முயற்சி

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் ஏதோ சத்தம் கேட்டு ராசு, தாயார் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு சென்று பார்த்தார். அங்கு பாவாயி, வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கில் அசைவற்று தொங்கி கொண்டிருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராசு, தாயார் இறந்து விட்டார் என கருதினார். மேலும் இது தொடர்பாக போலீஸ் விசாரிக்கும் என்று பயந்து போய் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். உடனே அவர் வீட்டில் வைத்திருந்த விஷ மாத்திரையை தின்று விட்டார். அவர் சிறிது நேரத்தில் வலியில் அலறி துடித்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினர் ராசுவை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கும், பாவாயியை வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

இதில் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பாவாயியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ராசுவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து நாமக்கல் மற்றும் வேலூர் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்ற ஜேடர்பாளையம் போலீசார் அவர்கள் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொத்து தகராறில் தாயும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஜேடர்பாளையம் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story