பக்கத்து வீட்டாரிடம் தாய் தகராறு.. மனமுடைந்த பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத செயல்


பக்கத்து வீட்டாரிடம் தாய் தகராறு.. மனமுடைந்த பிளஸ்-1 மாணவி எடுத்த விபரீத செயல்
x

பிளஸ்-1 மாணவி காவியபிரியா தனது தாயிடம் தகராறு வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானம்புச்சாவடி பகுதியில் உள்ள இடையர் தெருவை சேர்ந்தவர் கதிரேசன். இவர், தஞ்சையில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி செல்வகுமாரி. இவர்களுக்கு 3 மகள்கள். இவர்களில் மூன்றாவது மகள் காவியபிரியா(16). இவர், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

செல்வகுமாரி கடந்த ஆண்டு தனது வீட்டிற்கு அருகே உள்ள பெண்ணிடம் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை திரும்பி கேட்டதில் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு இருந்து வந்தது. காவியபிரியா தனது தாயிடம் தகராறு வேண்டாம் என பலமுறை கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய்க்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாய்த்தகராறு தொடர்ந்ததால் மனமுடைந்தார்.

இதனையடுத்து மாணவி காவியபிரியா சம்பவத்தன்று தனது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீக்குளித்தார். இதில் அவர் உடல் முழுவதும் தீப்பற்றியதால் தீயின் வேதனை தாங்காமல் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தாய் செல்வகுமாரி தனது மகளின் நிலையை பார்த்து கதறி அழுதார்.

பின்னர் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் பள்ளி மாணவியின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story