குழந்தைகள் கண் முன்னே தாய் தூக்குப்போட்டு தற்கொலை


குழந்தைகள் கண் முன்னே தாய் தூக்குப்போட்டு தற்கொலை
x

பேரணாம்பட்டு அருகே குழந்தைகள் கண் எதிரே தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்போனில் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர்

போனில் பேசினார்

பேரணாம்பட்டு அருகே உள்ள அனந்தகிரி கிராமம் இருளர் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி காயத்திரி (வயது 30). இவர்களுக்கு நவீன் (11), ஹேமந்த் (9) ஆகிய 2 மகன்களும், மதுலேகா (7) என்கிற மகளும் உள்ளனர்.

நேற்று காலை காயத்திரி தனது கணவர் வெங்கசை இறைச்சி வாங்கி வரும்படி கூறி அனுப்பி வைத்தார். பின்னர் காயத்திரி வீட்டில் தனது குழந்தைகளுடன் இருந்தபோது அவருடைய செல்போனுக்கு அழைப்பு வந்தது.

தூக்குப்போட்டு தற்கொலை

அதில் பேசிய சில நிமிடங்களில் காயத்திரி அறைக்கு சென்று கதவை பூட்டிக்கொண்டு தூக்குப்போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஜன்னல் வழியாக பார்த்து அதிர்ச்சியடைந்த காயத்திரியின் மூத்த மகன் நவீன் தனது தாயை காப்பாற்றும்படி கூச்சலிட்டு கதறி அழுதான்.

சத்தம் கேட்டு வெங்கடேசின் அண்ணன் ராஜி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கதவை உடைத்து அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் காயத்திரி இறந்துவிட்டார்.

மிரட்டியது யார்?

இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் காயத்திரியின் தாயார் குப்பம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமானுஜம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி காயத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காயத்திரியுடன் செல்போனில் பேசிய நபர் யார்?, அவர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story