தகாத உறவை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை


தகாத உறவை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
x

செய்யாறு அருகே தகாத உறவை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலனும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு அருகே தகாத உறவை கண்டித்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்காதலனும் விஷம் குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்காதல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா தளரவாடி கிராமத்தை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி (வயது 33), தொழிலாளி. இவருக்கு மேனகா என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இன்பன் என்பவரின் மனைவி ஆஷா, மேனகாவின் கணவருக்கு போன் செய்து குடும்ப பிரச்சினை தொடர்பாக பேச வேண்டும் என்று கூறி தனது வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தாண்டவமூர்த்தி, மேனகா ஆகியோர் ஆஷா வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர், எனது கணவருக்கும், மேனகாக்கும் தகாத உறவு உள்ளது. எனவே, உனது மனைவியை கண்டித்து வையுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாண்டவமூர்த்தி, மனைவியை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடிப்பு

இந்த நிலையில் தகாத உறவு வெளியே தெரிந்துவிட்டதால் இனி ஒன்றாக இருக்க முடியாது என்பதாலும், மன வேதனை அடைந்த கள்ளக்காதல் ஜோடி மேனகாவும், இன்பனும் விஷம் குடித்துள்ளனர்.

மயங்கி கிடந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேனகா பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்ந்து இன்பனிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தாண்டவமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மோரணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

சோகம்

தகாத உறவு வெளியே தெரிந்ததால் 2 குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story