தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்:ஓட்டல்உரிமையாளர் உள்பட 2 பேர் சாவு


தினத்தந்தி 24 Oct 2023 6:45 PM GMT (Updated: 24 Oct 2023 6:45 PM GMT)

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள்கள்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டல்உரிமையாளர் உள்பட 2 பேர் பலியாகினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் இதில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓட்டல் உரிமையாளர்

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவருடைய மகன் அந்தோணி சுரேஷ்குமார் (வயது 41). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். இவர் புதுக்கோட்டை சூசைப்பாண்டியாபுரம் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அப்போது, ஏரல் மாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி வீரமணி (வயது 62) என்பவர், ராஜயோகேஷ் (8) என்ற சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார்.

2 பேர் சாவு

அப்போது எதிர்பாராதவிதமாக இரு மோட்டார் சைக்கிள்களும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் மோட்டார் சைக்கிள்களில் இருந்து தூக்கி வீசப்பட்ட வீரமணி, அந்தோணி சுரேஷ்குமார், ராஜயோகேஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அந்தோணி சுரேஷ்குமார், வீரமணி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். பலத்த காயமடைந்த ராஜயோகேசுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story