மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன், தம்பி கைது


தினத்தந்தி 16 May 2023 6:45 PM GMT (Updated: 16 May 2023 6:46 PM GMT)

உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த காஜா மொய்தீன் மகன் சம்சுதீன் (வயது 32). இவர், உடன்குடியில் கோழி இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். கடந்த 14-ந் தேதி இரவு வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். மறுநாள் காலையில் பார்த்தபோது, அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. பின்னர் அவர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்துள்ளார்.

கண்காணிப்பு கேமரா பதிவு

அப்போது, கடந்த 15-ந் தேதி அதிகாலை 1.50 மணிக்கு குலசேகரன் பட்டினம் தியாகராஜபுரத்தை சேர்ந்த கணேசன் மகன்களான பட்டுதுரையும், 17 வயது வாலிபரும் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது பதிவாகியிருந்து. இந்தகண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் அவர் குலசேகரன்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.

அண்ணன், தம்பி கைது

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிய பட்டுத்துரையையும், அவரது தம்பியையும் போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.


Next Story