தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி


தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
x

தைலாவரம் கூட்ரோடு சந்திப்பில் புதிய சிக்னல் கம்பம் அமைக்காததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலையை பொதுமக்கள் எளிதாக கடப்பதற்காக போக்குவரத்து சிக்னல்அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழியாக சென்ற ஒரு வாகனம் மோதி போக்குவரத்து சிக்னல் கம்பம் சேதமடைந்தது. இதை தொடர்ந்து சேதமடைந்த கம்பத்தை அகற்றிய போலீசார் அங்கு மீண்டும் புதிதாக போக்குவரத்து சிக்னல் கம்பம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.

இதனால் தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலையை கடப்பதற்கு கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் சிக்னல் இருக்கும்போது சாலை விபத்து பெரும்பாலும் தவிர்க்கப்பட்டது. தற்போது அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் இல்லாததால் சில சமயங்களில் மட்டுமே போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர். மற்ற நேரங்களில் போக்குவரத்து போலீசார் நிற்பது கிடையாது. தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் மீண்டும் போக்குவரத்து சிக்னல் அமைத்து பொதுமக்கள் எளிதாக சாலையை கடந்து செல்வதற்கு தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story