போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி


போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி
x

காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்.டி. சாலை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் இயங்காததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ரெயில்வே கேட் எதிரே ஜி.எஸ்.டி‌. சாலை பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து சிக்னல் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட இயங்குவது கிடையாது. இதனால் இந்த சிக்னல் எதிரே உள்ள காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பல்வேறு கிராமங்களில் இருந்து தினந்தோறும் வரும் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இது மட்டுமின்றி இந்த சிக்னல் எதிரே காட்டாங்கொளத்தூர் ரெயில்வே கேட் அமைந்துள்ளது.

இந்த ரெயில்வே கேட் வழியாக காவனூர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். காட்டாங்கொளத்தூர் ஜி.எஸ்டி. சாலை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னல் இயங்காத காரணத்தால் தினந்தோறும் அந்த பகுதியில் சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே போக்குவரத்து சிக்னலை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story