குடியிருப்பில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்


குடியிருப்பில் கருஞ்சிறுத்தை நடமாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2023 9:45 PM GMT (Updated: 19 Oct 2023 9:45 PM GMT)

கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நீலகிரி

கோத்தகிரி அருகே குடியிருப்பில் கருஞ்சிறுத்தை புகுந்து நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கருஞ்சிறுத்தை

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையத்திற்கு பிரதான சாலை செல்கிறது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் பகுதியில் பெரியார் நகர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, கருஞ்சிறுத்தை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் உள்ள சாலையில் கருஞ்சிறுத்தை நடமாடியது. பின்னர் அருகில் இருந்த தேயிலை தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

விரட்ட வேண்டும்

கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்துக்குள் கடந்த 11-ந் தேதி சுவர் மீது ஏறி உள்ளே குதித்த கருஞ்சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட முயன்றது. ஆனால், நாய் கூண்டிற்குள் இருந்ததால் சிறுத்தையால் வேட்டையாட முடியவில்லை. தொடர்ந்து கருஞ்சிறுத்தை அதே பகுதியில் நடமாடி வருகிறது.

சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணித்துஅடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். ஏற்கனவே இதே பகுதியில் 4 கருஞ்சிறுத்தைகள் மற்றும் சிறுத்தைகள் உலா வந்ததுடன், அங்குள்ள வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story