புலி, கரடி நடமாட்டம்


புலி, கரடி நடமாட்டம்
x

ஊட்டியில் புலி, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் புலி, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

எருமை மாடு வேட்டை

நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, காட்டெருமை, காட்டுயானை, கரடி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனத்தில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்புகளின் அருகே உலா வருவது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக சில நேரங்களில் மனித-விலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இந்தநிலையில் ஊட்டி-கூடலூர் சாலையில் எச்.பி.எப். பகுதியில் வளர்ப்பு எருமை மாடு ஒன்றை வனவிலங்கு வேட்டையாடி தின்றதுபோக மீதமுள்ள உடல் பாங்களை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விட்டு சென்றது.

புலி நடமாட்டம்

இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு சென்று வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். அப்போது புலி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் எச்.பி.எப். குடியிருப்பு பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால் வெளியே நடமாட அந்த பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கரடி அட்டகாசம்

இதேபோன்று ஊட்டி 27-வது வார்டு தீட்டுக்கல் பகுதியில் உள்ள பால் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாட்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்களும் பீதி அடைந்து உள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். ஊட்டி நகர் பகுதி அருகில் புலி மற்றும் கரடி நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளிடமும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story