ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

வைகுண்ட ஏகாதசி விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ெசார்க்கவாசல்(பரமபதவாசல்) திறப்பும் நடைபெறுகிறது. 8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணி முதல் பகல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தும்.

அப்போது முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுவார்கள். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story