பென்னாகரம் அருகே பி.அக்ரகாரத்தில் முனியப்பன் கோவில் திருவிழா


பென்னாகரம் அருகே பி.அக்ரகாரத்தில் முனியப்பன் கோவில் திருவிழா
x

பென்னாகரம் அருகே பி.அக்ரகாரத்தில் முனியப்பன் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரகாரத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஆயிரக்கணக்கான ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் கொட்டும் பனியையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கோவிலுக்கு வந்து பொங்கல் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முனியப்பனுக்கு மார்கழி மாதம் 1-ந் தேதியில் இருந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிக்கொண்டும், அலகு குத்திக்கொண்டும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு இமயவர்மன், பென்னாகரம் இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முனியப்பன் கோவில் திருவிழாவையொட்டி தர்மபுரி, பென்னாகரம், பாலக்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான விவசாயிகள் கரும்புகளை விற்பனை செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை, ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story