பொள்ளாச்சி நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு 'சீல்' -நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை


பொள்ளாச்சி நகரில் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சீல் -நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2023 7:45 PM GMT (Updated: 27 Sep 2023 7:45 PM GMT)

பொள்ளாச்சி நகரில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர்


பொள்ளாச்சி


பொள்ளாச்சி நகரில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.


அதிகாரிகளுடன் வாக்குவாதம்


பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், நியூஸ்கீம் ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை தொடர்ந்து விதிமுறையை மீறிய கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில் நகராட்சி ஆணையாளர் ஸ்ரீதேவி உத்தரவின் பேரில் நகரமைப்பு அலுவலர் சாந்திநிர்மலாபாய் தலைமையில் நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் ஊழியர்கள் சென்று மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு டீக்கடை செயல்பட்டு வந்த கட்டிடம் விதிமுறைகளை மீறியதாக நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். கோட்டூர் ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் விதிமுறை மீறப்பட்டு உள்ளதாக கூறி நகரமைப்பு அதிகாரிகள் சீல் வைக்க சென்றனர். அப்போது அங்கு அதிகாரிகளுடன் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-


நோட்டீஸ்


பொள்ளாச்சி நகரில் விதிமுறைகளை மீறிய கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி தற்போது மகாலிங்கபுரத்தில் உள்ள ஒரு டீக்கடை செயல்பட்டு வந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று கோட்டூர் ரோட்டில் அனுமதி வாங்கும் போது குறிப்பிட்ட சதுர அடியை விட கூடுதல் சதுர அடிக்கு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. மேலும் வாகனம் நிறுத்தும் வசதி இல்லாததால் அந்த கட்டிடத்திற்கும், வெங்கடேசா காலனியில் உள்ள ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இதேபோன்று நகரில் விதிமுறையை மீறிய சுமார் 60 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அனுமதிக்கு மாறாக கட்டப்படுகிறதா? வாகன நிறுத்தும் இடவசதி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. விதிமுறையை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.



Next Story