முப்பலியம்மன், மாரியம்மன் கோவில் தேரோட்டம்


முப்பலியம்மன், மாரியம்மன் கோவில் தேரோட்டம்
x

வேப்பந்தட்டை அருகே உள்ள முப்பலியம்மன், மாரியம்மன் கோவிலில் 60 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர்

முப்பலியம்மன் கோவில்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூரில் பிரசித்தி பெற்ற முப்பலியம்மன், மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு தேரோட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஊர் முக்கியஸ்தர்கள் தேரை சீரமைப்பது என முடிவு செய்தனர். அதன்படி கோவில் தேர் சீரமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த 22-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

இதையடுத்து, பால்குடம் எடுத்தல், முப்பலியம்மன், மாரியம்மன் குடிஅழைத்தல், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், சுவாமி திருவீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது மங்கள இசையுடன் முப்பலியம்மன், மாரியம்மன் திருதேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து ெசன்றனர். முடிவில் கோவில் வளாகத்தில் தேர் நிலை நின்றது.

60 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழா என்பதால் வெண்பாவூர் மட்டுமல்லாமல் அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இன்று (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.


Next Story