முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு: இதுவரை 20 சாட்சிகளிடம் விசாரணை


முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கு: இதுவரை 20 சாட்சிகளிடம் விசாரணை
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

முறப்பாடு கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் இதுவரை 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள சூசைபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 53). இவர், ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார்.

இவர் கடந்த 25.4.2023 அன்று தனது அலுவலகத்தில் இருந்தபோது, மணல் கடத்தல் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த 21-ந்தேதி முதல் தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி செல்வம் முன்னிலையில் சாட்சிகள் விசாரணை நடந்து வருகிறது. நேற்று 5-வது நாளாக சாட்சி விசாரணை நடந்தது. இதில் நெல்லை அரசு டாக்டர்கள் 2 பேர், கைரேகை நிபுணர்கள் 2 பேர் ஆக மொத்தம் 4 பேரிடம் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் இதுவரை 20 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.


Next Story