தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை


தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டிக்கொலை
x

ஒட்டன்சத்திரம் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், தூங்கி கொண்டிருந்த விவசாயியை வெட்டிக்கொலை செய்தனர்.

திண்டுக்கல்

விவசாயி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள போல்நாயக்கன்வலசு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 72). விவசாயி. இவர் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார்.

அவருடைய மனைவி துரைக்கண்ணு. இந்த தம்பதிக்கு முத்துலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்செல்வி என 3 மகள்கள் உள்ளனர். இவர்கள் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துரைக்கண்ணு இறந்து விட்டார். இதனால் முத்துசாமி மட்டும் அவரது தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். அந்த வீடு, ஓடுகளால் வேயப்பட்டதாகும். நேற்று முன்தினம் இரவு முத்துசாமி, தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

இந்தநிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள், ஓடுகளை பிரித்து வீட்டுக்குள் இறங்கினர். பின்னர் கண்இமைக்கும் நேரத்தில், தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக முத்துசாமியை வெட்டினர்.

இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே நேற்று காலை தோட்ட வேலைக்காக பெண் ஒருவர் அங்கு வந்தார். வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் முத்துசாமி இறந்து கிடந்ததை கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மோப்பநாய் சோதனை

இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் முத்துசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது, வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தப்படி சிறிதுதூரம் ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் தடயவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

காரணம் என்ன?

கொலை நடந்த வீட்டுக்குள் 18 பவுன் நகைகள் மற்றும் ரூ.51 ஆயிரம் திருட்டு போகாமல் அப்படியே இருந்தது. இதனால் பணம், நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

ஆனால் எதற்காக முத்துசாமி கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். நள்ளிரவில் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி விவசாயியை வெட்டிக்கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story