உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலை: கைதான வாலிபர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்


உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலை: கைதான வாலிபர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
x

நெல்லையில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

திருநெல்வேலி

நெல்லையில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் கொலையில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

வாலிபர் கொலை

நெல்லை கொக்கிரகுளம் அருகே உள்ள கீழவீரராகவபுரத்தை சேர்ந்தவர் சோமு மகன் முகேஷ் (வயது 32). இவருக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 2-ந்தேதி இரவு உணவு வினியோகம் செய்ய வெளியே சென்றார். அப்போது குருந்துடையார்புரம் பகுதியில் அவரை ஒரு கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து வாலிபரின் உடல் கைப்பற்றப்பட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த அழகுமுத்து (24), மகாராஜன் (20) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். அழகுமுத்து, மகாராஜன் ஆகியோர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக கீழவீரராகவபுரத்தை சேர்ந்த முருகேஷ் (24) என்பவர் சேரன்மாதேவி கோர்ட்டில் சரண் அடைந்தார்.

பரபரப்பு வாக்குமூலம்

முகேசை கொலை செய்த காரணம் குறித்து அழகுமுத்து உள்ளிட்டவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட முகேஷ் ஊர் நாட்டாண்மையாக இருந்தார். அப்போது அங்கு நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு அவ்வப்போது தகவல் தெரிவித்து வந்துள்ளார். இதுதொடர்பாக அவருக்கும், அழகுமுத்து தரப்பினருக்கும் கோவில் கொடை விழா நேரங்களில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அழகுமுத்துவின் உறவினரை நெல்லை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முகேஷ் தெரிவித்த தகவலின்பேரில் தான் அவரை போலீசார் கைது செய்துள்ளனர் என அழகுமுத்து நம்பியுள்ளார். இதனால் முகேசை தீர்த்துக்கட்ட அவர் திட்டம் போட்டுள்ளார். அதன்படி தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த மகாராஜன், முருகேஷ் ஆகியோருடன் சென்று முகேசை வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story