சோழர் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்


சோழர் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும்
x

தஞ்சையில் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் அருங்காட்சியக கட்டுமான பணி விரைவில் தொடங்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

அமைச்சர் ஆய்வு

தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையத்துறை அரசு முதன்மை செயலாளர் மணிவாசன், அருங்காட்சியக ஆணையர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்றுமாலை ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-உலகை ஆண்ட சோழர்களின் பங்களிப்பை போற்றவும், அக்கால கலைப்பொருட்கள், நினைவு சின்னங்களை பாதுகாக்கவும் தஞ்சையில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் சோழர்களின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.

சோழர்களின் போர் வெற்றி

இந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக தஞ்சை பெரியகோவில் மேம்பாலம் அருகில் உள்ள இடத்தை மாவட்ட கலெக்டர் ஏற்கனவே தேர்வு செய்து துறை செயலாளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் காண்பித்துள்ளார். தஞ்சை மாநகரில் இவ்வளவு பெரிய இடம் கிடைத்திருப்பது அரிய வாய்ப்பு. முதல்-அமைச்சரின் எண்ணம் வீண் போகாத வகையில் சிறந்த அருங்காட்சியகத்துக்கு இந்த இடம் ஏற்புடையதாக உள்ளது. இந்திய வரலாற்றில் சோழர்களின் காலம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.தஞ்சை பெரியகோவிலை கட்டி மாமன்னன் ராசராசசோழன், கங்கைகொண்ட சோழபுரம் கட்டிய ராஜேந்திர சோழன் என பிற்கால சோழர்களின் பங்களிப்பு என தமிழகத்தில் நிலை நாட்டிய பெருமை உண்டு. சோழர்களின் போர் வெற்றி, கோவில் பணிகள், சமுதாய பணிகள், கலைத்திறன் என எல்லாவற்றையும் விளக்கக்கூடிய வகையில் அருங்காட்சியகம் அமைய உள்ளது.

விரைவில் கட்டுமான பணி

ஏற்கனவே பெரியகோவில் ஆயிரம் ஆண்டு விழாவின்போது சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட்டது. அது ஒரு குறிப்பிட்ட காலம் தான் நடைபெற்றது. தற்போது நிரந்தரமாக இந்த அருங்காட்சியகம் தஞ்சையில் அமைய உள்ளது. பெரியகோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எளிதாக அருங்காட்சியகத்திற்கு வந்து பார்ப்பதற்கு சிறந்த இடமாக அமைந்துள்ளது. விரைவில் முதல்-அமைச்சரின் ஒப்புதலின்பேரில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், தஞ்சை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் (பொறுப்பு) சிவக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story