பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தி குர்பானி கொடுத்து மகிழ்ந்தனர்.

அரியலூர்

முஸ்லிம்களின் தியாக திருநாளாக போற்றப்படும் பக்ரீத் பண்டிகை நேற்று நாடு முழுவதும் வெகு கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி அரியலூர் நகர ஜூம்மா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் அவர்கள் தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு, ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழூவூர், வெங்கனூர், திருமானூர், உடையார்பாளையம், விக்கிரமங்கலம், செந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு தொழுகையில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜெயங்கொண்டம் ஜூப்ளி ரோட்டில் அமைந்துள்ள ஜூம்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோன்று ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். முஸ்லிம் சிறுவர்-சிறுமிகளும் ஒருவருக்கொருவர் கட்டி தழுவியும், கை கொடுத்தும் பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். பிறகு முஸ்லிம்கள் மாடு, ஆடுகளின் இறைச்சிகளை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு குர்பானியாக கொடுத்து மகிழ்ந்தனர்.


Next Story