முத்து மாரியம்மன் கோவில் திருவிழா


முத்து மாரியம்மன் கோவில் திருவிழா
x
தினத்தந்தி 26 Jun 2023 10:15 PM GMT (Updated: 26 Jun 2023 10:15 PM GMT)

கீழ் கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி

கீழ் கோத்தகிரி அருகே முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோவில் திருவிழா

கீழ் கோத்தகிரி அருகே அம்மன் நகர் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி காலை 7 மணிக்கு ் கணபதி வேள்வி, காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 6 மணிக்கு அம்மன் அழைப்பு நடைபெற்றது. 24-ந் தேதி காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை, மதியம் 12 மணிக்கு மாவிளக்கு பூஜை நடந்தது.

பின்னர் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் திருவீதி உலாவாக அழைத்து செல்லப்பட்டார். திருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மேள தாளங்களுடன் பக்தர்கள் பறவை காவடி, கத்தி காவடி ஏந்தியும், லாரிகளில் தொங்கியவாறு பறவைக்காவடி ஏந்தி ஊர்வலமாக கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பால்குட ஊர்வலம்

இந்த காட்சி பார்ப்போரை மெய் சிலிர்க்க வைத்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் தீ சட்டி, பால் குடங்களை ஏந்தி ஊர்வலம் சென்றனர். காலை 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடைபெற்று, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 3 மணிக்கு அம்மன் கரகம் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழா, அம்மனை கங்கையில் திருவிடையாற்றும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். வருகிற 30-ந் தேதி மறுபூஜை நடைபெறுகிறது.


Next Story